7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - முதல் நாள் 1

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

இன்றைய பதிவில் 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை பற்றி காண உள்ளோம். திருமுறை என்றாலே வாழ்வியல் வழிகாட்டி என்பது சாலப் பொருந்தும். தமிழ் மொழி ஒன்றும் வழக்கமான மற்ற மொழிகள் போன்றது அன்று. இங்கு நாம் மற்ற மொழிகளை குறைத்து மதிப்பிடவில்லை. தமிழ் மொழி வாழ்வியல் மொழி, பக்தி மொழி, முக்தி மொழி ஆகும். இன்று தமிழில் பேசுதல் என்பது மறைந்து வருகின்றது. பேசுவதே கடினம் என்று பார்த்தால் எழுதுவது மிக கடினம் ஆகும். எங்கே போகின்றோம் நாம்? என்று சிந்தித்து பார்க்க வேண்டி உள்ளது. தமிழ் மொழியில் ஒவ்வொரு செயலுக்கு தக்க சொல் பயன்பாட்டில் உள்ளது.

வழிபாடு - நாம் நித்தம் படும் கஷ்டத்திற்கு வழி காட்டுதல் 

திருமுறை - இறையை பற்ற காட்டும் வழி 

இது போன்ற பல செய்திகள் தமிழ் மொழிக்கு மட்டுமே உண்டு. சரி..மீண்டும் திருமுறை பற்றி இன்று சிந்திப்போம்.




பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில:


  • பாண்டிய மன்னன் வெப்பு நோய் தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. 
  • வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு திறந்து, பின் தாளிட்டது. 
  • பாலை நிலம் நெய்தல் ஆனது. 
  • தேவார ஏடுகள் தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, 
  • வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே நீந்தியது. 
  • ஆண் பனை பெண் பனையாயிற்று. 
  • எலும்பு பெண்ணாகியது. 
  • விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். 
  • ஆற்றில் போட்டது குளத்தில் கிடைத்தது. 
  • சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு இருந்தது. 
  • மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில் வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. 
  • நரி குதிரையாகியது. 
  • முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. 
  • பிறவி ஊமை பேசியது. 
  • சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. 


இன்னும் பல எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.

பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள் வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும் திருமுறை ஓதுவோம்.

பன்னிரு திருமுறை தினமும் ஓதுவதற்கு ஏற்ப, 7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை என்று இன்று முதல் தொடர்கின்றோம். இன்று முதல் நாள் பன்னிரு திருமுறை கீழே தருகின்றோம்.

1 ஆம் திருமுறை

 தோடு உடைய செவியன் விடை ஏறி ஓர் தூ வெண் மதி சூடிக்

 காடு உடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளங் கவர் கள்வன் 

 ஏடு உடைய மலரான் உன்னை நாள் பணிந்து  ஏத்த அருள் செய்த

 பீடு உடைய பிரமா புரம் மேவிய பெம்மான் இவன் அன்றே 

2 ஆம் திருமுறை 

மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;

சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப் படுவது நீறு;

தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;

செந்துவர் வாய் உமை பங்கன், திரு ஆலவாயான் திருநீறே.


3 ஆம் திருமுறை 

காதல் ஆகிக் கசிந்து கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நன்னெறிக்கு உய்ப்பது


வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது


நாதன் நாமம் நமச்சிவாயவே.


4 ஆம் திருமுறை 

கருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன்

உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனதருளால்

திருவாய்ப் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன்

தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே.

5 ஆம் திருமுறை 

மாசில் வீணையும் மாலை மதியமும்

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே

ஈசன் எந்தை  இணை அடி நீழலே.

6 ஆம் திருமுறை 


ஓசை ஒலி எலாம் ஆனாய், நீயே;

      உலகுக்கு  ஒருவனாய் நின்றாய், நீயே;

வாசமலர் எலாம் ஆனாய், நீயே;

     மலையான் மருகனாய் நின்றாய், நீயே;

பேசப் பெரிதும் இனியாய், நீயே;

     பிரானாய் அடி என்மேல் வைத்தாய், நீயே;

தேச விளக்கு எலாம் ஆனாய், நீயே

      திருவையாறு  அகலாத செம்பொன் சோதி!

7 ஆம் திருமுறை 

பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா

எத்தான்  மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை

வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்

அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.

8 ஆம் திருமுறை 

வேண்டத் தக்கது அறிவோய் நீ,

            வேண்ட முழுதும் தருவோய் நீ,

வேண்டும் அயன்,மாற்கு அரியோய் நீ,

           வேண்டி என்னைப் பணிகொண்டாய்,

வேண்டி நீ யாது, அருள்செய்தாய்,

          யானும் அதுவே வேண்டின் அல்லால்

வேண்டும் பரிசுஒன்று உண்டு என்னில்

          அதுவும் உன்றன் விருப்பன்றே.

9 ஆம் திருமுறை 

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !

            உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !

தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !

            சித்தத்துள் தித்திக்கும் தேனே !

அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !

           அம்பலம் ஆடரங் காக

வெளிவளர் தெய்வக் கூத்து உகந்தாயைத்

           தொண்டனேன் விளம்புமா விளம்பே. 

திருப்பல்லாண்டு 

தாதையைத் தாள் அற வீசிய 

            சண்டிக்கு இவ் அண்டத்தொடு உடனே

பூதலத்தோரும் வணங்கப் பொற்

            கோயிலும் போனகமும் அருளிச்

சோதி மணிமுடித் தாமமும் 

            நாமமும் தொண்டர்க்கு நாயகமும்

பாதகத்துக்கே பரிசு 

            வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே ! 


10 ஆம் திருமுறை 

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை

யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே


11ஆம் திருமுறை 

மற்றும் பலபிதற்ற வேண்டாம் மடநெஞ்சே

கற்றைச் சடையண்ணல் காளத்தி - நெற்றிக்கண்

ஆரா அமுதின் திருநாமம் அஞ்செழுத்தும்

சோராமல் எப்பொழுதும் சொல்.

12 ஆம் திருமுறை 

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்



வான்முகில் வழாது பெய்க
        மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
        குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
        நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி
        விளங்குக உலக மெல்லாம்.

மீண்டும் சந்திப்போம். 

மீள்பதிவாக:-

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்! - https://tutthamizhthirumurai.blogspot.com/2021/11/blog-post.html


Comments

Popular posts from this blog

7 நாள் திருமுறை வழிபாட்டு பாமாலை - மூன்றாம் நாள் 3

தித்திக்கும் திருமுறை பாராயணம் தினமும் செய்வோம்!